உ.பி. சிறையில் 19 ஆண்டுகள் இருந்த பாகிஸ்தானியர் மீதான வழக்கில் மீண்டும் விசாரணை

மீரட்: உத்தர பிரதேசத்தின் ஷாம்லி பகுதி ஜோலா கிராமத்தில் கடந்த 2000-ம் ஆண்டில் முகமது வாரிஸ் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானை சேர்ந்த அவரிடம் இருந்து கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருக்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டில் முகமது வாரிஸுக்கு, ஷாம்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். முகமது வாரிஸ் மீது சட்டப்பிரிவு 196-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த பிரிவின்படி மத்திய அரசு, மாநில அரசின் அனுமதி பெறாமல் அவருக்கு சிறை தண்டனை விதிக்க முடியாது. முறையான அனுமதி பெறாததால் முகமது வாரிஸை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2019 டிசம்பரில் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரை மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் கிடையாது என்று அந்த நாட்டு அரசு மறுத்ததால் அவரை சொந்த நாட்டுக்கு அனுப்ப முடியவில்லை. ஷாம்லி நகர் போலீஸார் அவரை தங்கள் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளனர்.

இந்த சூழலில் 70 வயதாகும் முகமது வாரிஸ் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது. இதன்படி ஷாம்லி நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

முகமது வாரிஸின் குடும்பம் பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் வசிக்கிறது. அவரது மகன் குல்சார் கூறும்போது, “எனது தந்தைக்கு 45 வயது இருக்கும்போது நண்பரை சந்திக்க இந்தியா சென்றார். அவரை இதுவரை எங்களால் மீட்க முடியவில்லை” என்று பாகிஸ்தான் தொண்டு நிறுவனத்தில் முறையிட்டுள்ளார்.

ஆனால் முகமது வாரிஸ் பாகிஸ்தானை சேர்ந்தவர் இல்லை என்று அந்த நாட்டு அரசு தொடர்ந்து வாதிட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.