நகை, கணக்கு விவரம் – சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் நகைகள் மற்றும் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனக சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய கோவில் தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு பக்தர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தெய்வத் தமிழ் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் ஏறிப் பாட அரசாணை விதித்தது. இதனை அடுத்து பக்தர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கனக சபையில் ஏறி சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுவினர் ஆய்வுக்காக கோயிலுக்குச் சென்றபோது அவர்களுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர். இதையடுத்து, இந்து அறநிலையத் துறை நடராஜர் கோயில் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என்று செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மெயில் மூலமாகவும் நேரடியாகவும் சுமார் 5000 புகார்கள் இந்து அறநிலையத் துறைக்கு அனுப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதாக கோயில் பொது தீட்சிதர்களுக்கு கடிதம் அனுப்பினார். அதற்கு கோயில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினர்.அதன் பின்னர் கடந்த வாரம் தீட்சிதர்கள் ஆய்வுக்கு வருமாறு இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினர்.

இந்த நிலையில், இன்று (ஆக.22) காலை 11 மணி அளவில் இந்து அறநிலையத் துறை திருவண்ணாமலை துணை ஆணையர் குமரேசன், கடலூர் துணை ஆணையர் ஜோதி, விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், திருச்சி நகை மதிப்பீட்டு வல்லுனர் தர்மராஜன், திருவண்ணாமலை நகை மதிப்பீட்டு குழு வல்லுனர் குமார், விழுப்புரம் நகை மதிப்பீட்டு குழு வல்லுனர் குருமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் கோயிலுக்கு வந்தனர்.

தீட்சிதர்கள் அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர். கோயிலுக்குள் சென்ற குழுவினர் நகை மற்றும் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.