கோவை: திருப்பூரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2011ல் பாசி டிரேடிங் என்ற ஆன்லைன் நிதி நிறுவனத்தினர் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.930 கோடிமோசடி செய்தது. இதுதொடர்பாக, அந்த நிறுவனத்தின் இயக்குநர் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன் மற்றும் பங்குதாரர் கமலவள்ளி ஆகியோரை சி.பி.ஐ போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக கோவையில் உள்ள தமிழக முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) வழக்கு தொடரப்பட்டது. 2013ல் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
9 ஆண்டுகள் சாட்சி விசாரணை நடந்து வந்தது. அரசு மற்றும் எதிர்தரப்பு சாட்சியம், இருதரப்பு வாதம் முடிந்ததை தொடர்ந்து கடந்த 11ம் தேதி, 22ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க உள்ளதால் தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ரவி, மோசடி வழக்கின் தீர்ப்பை வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.