பெரியபாளையம் பஜார் பகுதியில் பழுதாகி கிடக்கும் உயர்கோபுர மின்விளக்கு; இருளில் பொதுமக்கள் தவிப்பு

பெரியபாளையம்: பெரியபாளையம் பஜார் பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பெரியபாளையம் – ஊத்துக்கோட்டை – திருவள்ளூர் மும்முனை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்விளக்கு 3 மாத காலமாக சரியாக எரியாமல் உள்ளது. மேலும் இந்த சந்திப்பு சாலையை கடந்து தான் பக்தர்கள் புகழ்பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு சென்று வருகின்றனர். தற்போது ஆடி திருவிழா நடைபெறும் நிலையில் மேலும் இப்பகுதி கடைகள், ஓட்டல், டீக்கடை, குடியிருப்பு ஆகியவை அதிக அளவில் உள்ளன. மேலும் 4 பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

எப்போதும் பரபரப்பாக இருந்து வந்த நிலையில் இப்பகுதியில் உள்ள உயர்கோபுர விளக்கு சரிவர எரியாததால் அப்பகுதியே இருளில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் இரவில் நடக்கிறது. மேலும் பழுதடைந்து கிடக்கும் உயர்கோபுர மின் விளக்கை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பஜார் கடை வியாபாரிகள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே, பழுதடைந்துள்ள உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.