கட்சி மாற பேரம் பேசுவதாக பா.ஜ.க மீது குற்றச்சாட்டு; 4 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் குறித்து ஒர் பார்வை

From controversial Somnath to face of protests: 4 MLAs AAP says on BJP watch: கட்சி மாறுவதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் ரூ.20 கோடி தருவதாகக் கூறி தங்களை அணுகியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.,க்கள் புதன்கிழமை குற்றம்சாட்டினர். பா.ஜ.க இந்த குற்றச்சாட்டை நிராகரித்த நிலையில், அதை பொய் என்று முத்திரை குத்தி, ஆம் ஆத்மி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, பா.ஜ.க தனது 35 சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டியது.

குற்றச்சாட்டை முன்வைத்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் பற்றிய ஒரு பார்வை:

இதையும் படியுங்கள்: டெல்லி ரகசியம்; மோடிக்கு பிடித்த முதல்வர் யார் தெரியுமா?

சோம்நாத் பாரதி

வழக்கறிஞராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர் 2013 இல் டெல்லி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். அவர் சட்டம், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் கலை மற்றும் கலாச்சார இலாகாக்களை கையாண்டார். மாளவியா நகரில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ள சோம்நாத் பாரதி, டெல்லி ஐ.ஐ.டி.,யில் எம்.எஸ்சி பட்டப்படிப்பை முடித்துவிட்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர்.

சோம்நாத் பாரதி அடிக்கடி சர்ச்சைகளின் மையத்தில் இருப்பவர். 2013 ஆம் ஆண்டில், விபச்சார மற்றும் போதைப்பொருள் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, கிர்கி விரிவாக்கத்தில் உள்ள ஆப்பிரிக்க நாட்டவர்களின் வீடுகளை சோதனை செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்ட பின்னர் அவர் வெளிச்சத்திற்கு வந்தார். செப்டம்பர் 2015 இல், சோம்நாத் பாரதியின் மனைவி குடும்ப வன்முறை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டினார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மே 2019 இல், டெல்லி உயர் நீதிமன்றம் சோம்நாத் பாரதியை விடுவித்தது.

அஜய் தத்

அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வான அஜய் தத், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சியில் இணைவதற்கு முன்பு தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) சேவை நிறுவனத்தை நடத்தி வந்தார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள அஜய் தத், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அமிட்டி பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் கர்நாடகாவில் ஆம் ஆத்மியின் மக்களவை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தார், அங்கு அவர் முன்பு சில ஆண்டுகள் பணியாற்றினார். இந்த ஜூன் மாதம் தனக்கு குண்டர்களிடம் இருந்து மிரட்டி பணம் பறிக்கும் அழைப்புகள் வந்ததாக அஜய் தத் கூறினார்.

சஞ்சீவ் ஜா

ஆம் ஆத்மியிலிருந்து மூன்று முறை புராரி தொகுதி எம்.எல்.ஏ.,வான சஞ்சீவ் ஜா, 2020 சட்டமன்றத் தேர்தலில் 88,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வளர்ந்து வரும் பூர்வாஞ்சலி தலைவரான சஞ்சீவ் ஜா பீகாரின் மதுபானி மாவட்டத்தில் பிறந்தவர். பீகாரில் பட்டப்படிப்பை முடித்த பிறகு தேசியத் தலைநகர் டெல்லிக்கு வந்தார். ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் சேருவதற்கு முன்பு கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு சேரியில் வசிக்கும் குழந்தைகளுக்கு அவர் கற்பித்து வந்தார். 2012 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டபோது அவர் உறுப்பினரானார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக பல சட்டமன்றக் குழுக்களில் அங்கம் வகித்துள்ளார். அஜய் தத்தைப் போலவே, சஞ்சீவ் ஜாவும் ஜூன் மாதம் தனக்கு குண்டர்களிடம் இருந்து மிரட்டி பணம் பறிக்கும் அழைப்புகள் வந்ததாகக் கூறினார்.

குல்தீப் குமார்

கோண்ட்லி தொகுதி எம்.எல்.ஏ.,வான குல்தீப் குமார் இந்த ஆண்டு நகரில் ஆம் ஆத்மியின் இடிப்பு எதிர்ப்பு போராட்டங்களில் முன்னணியில் இருந்தார். அவர் முன்பு கிழக்கு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷனில் கவுன்சிலராக இருந்தவர், மேலும் 2020 சட்டமன்றத் தேர்தலில் மனோஜ் குமாருக்கு பதிலாக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.