பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-சித்ரதுர்கா முருக மடத்தில் பாலியல் சம்பவம் நடந்திருக்க கூடாது என்பது எனது கருத்து. இது மிகவும் சிக்கலான விஷயம். கர்நாடகத்தில் ஏற்கனவே உணர்வு பூர்வமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய விஷயங்கள் குறித்து விவாதிக்காமல் இருப்பதே நல்லது. அரசு சட்டப்படி எந்த மாதிரியான விசாரணை நடத்த வேண்டுமோ அதை நடத்தட்டும். இதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை.
சுற்றுலாத்துறை மந்திரி ஆனந்த்சிங் ஒரு நபருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்த நபர் மீதே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல் விடுத்த மந்திரி மீது வழக்கு பதிவு செய்யவில்லை. இதன் மூலம் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டசபை கூட்டத்தில் பேசுவேன்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.