அண்ணாவின் பிறந்த நாளில் சசிகலா ஏற்ற சபதம்

அதிமுகவை பிளவுபட்டுள்ள அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பது எனது விருப்பம் என்று தஞ்சையில் சசிகலா கூறியுள்ளார். தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு சசிகலா பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க.வில் பிளவுப் பட்டு உள்ள அனைவரும்   ஒன்றிணைய வேண்டும். இந்த நாளில் நான் இதை சபதமாக ஏற்கிறேன். அதிமுகவில் அனைவரும் நிச்சயமாக ஒன்றாக இணைவோம். 

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பி.எஸ். சரியாக தான் சொல்லி இருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம். இதுதான் தொண்டர்களின் விருப்பம். பண்ருட்டி ராமச்சந்திரன், எங்கள் கட்சியின் மூத்த தலைவர் என்பதால் அவரை ஓ.பி.எஸ். பார்த்திருக்கலாம். தொண்டர்கள் நினைத்தால் கட்சித் தலைமையை நான் ஏற்க தயாராகவுள்ளேன்” என கூறினார். முன்னதாக தஞ்சை பரிசுத்த நகரில் உள்ள சசிகலாவின் வீட்டு வளாகத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அப்போது அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் சசிகலா தான் என்று தொண்டர்கள் உற்சாகத்துடன் கோஷங்கள் எழுப்பினர். சில நாட்களுக்கு முன்பு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்த சசிகலா, அங்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிளவுபட்ட அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் எனக் கூறிய அவர், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருவதாகவும் சாடினார். குறிப்பாக, அதிமுக ஆட்சியில் இருந்தபோது மூத்த அமைச்சராக வலம் வந்த தங்கமணியின் சொந்த தொகுதியான பள்ளிபாளையத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.