வடிவேலு பேசியதும் பாதி குணமாகிட்டேன் – போண்டா மணி நெகிழ்ச்சி

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் போண்டாமணி. இவர் ஈழத்தை பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார். விவேக், வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக, மருதமலை படத்தில் வடிவேலுவுடன் இவர் வரும் காட்சி இன்றளவும் பலரால் ரசிக்கப்படுகிறது. இந்தச் சூழலில்  நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் நேற்று அவரை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் போண்டா மணியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என உறுதியளித்தார். 

 

இந்நிலையில் நடிகர் போண்டா மணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கேட்டவுடனே நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 லட்சம் பணத்தை வங்கி எண்ணிற்கு போட்டுவிட்டார் அவர் கொடுத்த ஒரு லட்சம் ஒரு கோடிக்கு சமம். எனக்கு உதவி செய்ய உள்ளதாக வடிவேலு பேசியதைக் கேட்டு பாதி குணமடைந்துவிட்டேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் போன் மூலம் தொடர்புக் கொண்டு போண்டாமணியை நலம் விசாரித்து அவருக்கு தேவையான உதவியை செய்து வருகிறார். இது பற்றி அவர், தகவல் கேள்விபட்டவுடன் நான் மருத்துவர் பக்தவத்சலத்துடன் பேசினேன். போண்டா மணிக்கு என்ன தேவையோ அதை செய்ய இருக்கிறேன் என கூறியிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.