பவர்ஃபுல் பதவி:
திமுகவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உட்கட்சித் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆட்சி, அதிகாரத்தில் அமைச்சருக்கு இணையான, கட்சியில் பவர்ஃபுல் பொறுப்பான மாவட்டச் செயலாளர் பதவியை பிடிக்க உடன்பிறப்புகள் மத்தியில் பல மாவட்டங்களில் மல்லுக்கட்டு நடந்து வருகிறதாம். மா.செ., தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், கட்சியின் உச்சபட்சமான இந்த பதவியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளனராம் உடன்பிறப்புகள்.
மண்ணின் மைந்தர்கள்:
திமுகவில் மொத்தம் உள்ள 72 மாவட்டச் செயலாளர்கள் பதவியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர், கரூர், ஈரோடு, திருச்சி, கடலூர், அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட மண்ணின் மைந்தர்களே மாநில அமைச்சர்களாக உள்ள மாவட்டங்களில் அவர்களே மாவட்டச் செயலாளர்களாகவும் இருக்க விருப்பு மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த மாவட்டங்களில் அவர்களே மா.செ.க்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது 99% உறுதி என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
பலமுனைப் போட்டி:
அமைச்சர்கள் அல்லாத பிற மாவட்டங்களில்தான் மா.செ., பதவிக்கு இரண்டு முனை, மும்முனை, ஏன் பலமுனை போட்டியும் நிலவி வருகிறதாம். குறிப்பாக மதுரை மாநகர திமுக செயலாளர் பதவியை மீண்டும் பிடிக்க, பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். இவர்களுடன் எஸ்.ஆர்.கோபி, வேலுச்சாமி, மா.ஜெயராமன் உள்ளிட்ட அரை டஜன் பேரும் கோதாவில் இறங்கி உள்ளனராம். 
மதுரை மாநகர மேயரின் கணவர் பொன்.வசந்த், மாநில மாணவரணி நிர்வாகி அதலை செந்தில்குமார் என அமைச்சர் பிடிஆரின் ஆசி பெற்றவர்களும் மா.செ. பதவிக்கான ரேசில் இருக்கின்றனராம். இப்படி பலமுறை போட்டி ஏற்பட்டுள்ள தூங்காநகரத்தில் யார் மா.செ.வாக நியமிக்கப்படுவார்கள் என்று கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருக்கின்றனராம் உடன்பிறப்புகள்.
மும்முனைப் போட்டி:
இதேபோன்று, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை பிடிப்பதில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறதாம். இங்கு ஸ்டாலின ஆதரவாளரான வெப்படை செல்வராஜ், துர்கா ஸ்டாலின் ஆதரவாளரான ராமலிங்கம் எம்எல்ஏ, 
தரப்பு ஆதரவு பெற்ற மதுரா செந்தில் ஆகிய முன்று பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் யாருக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது என்பதை பொறுத்து, மா.செ.க்கள் நியமனத்தில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோரில் யாருடைய கை ஓங்கி உள்ளது என்பதை அறிந்துக் கொள்ளலாம் என்கின்றனர் அறிவாலய அரசியலில் அத்துப்பிடியான விவரமறிந்தவர்கள்.
இருமுனைப் போட்டி:
தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை வடக்கு, கள்ளக்குறிச்சி வடக்கு உள்ளிட்ட மாவட்டங்களில் மா.செ., பதவியை பிடிக்க இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளதாம். இவற்றில் குறிப்பாக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தில் இன்னாள் எம்எல்ஏ வசந்தகார்த்திகேயனும், முன்னாள் எம்எல்ஏ மூக்கப்பனும் களமிறங்கி உள்ளனராம்.
சமாதான பேச்சுவார்த்தை:
 மா.செ., பதவிக்கு இருமுனை, மும்முனை, பலமுனை போட்டி நடக்கும் மாவட்டங்களில் தேர்தல் மூலம் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறி இருந்தாலும், இதனால் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே மோதல் வெடிக்காமல் தடுக்கும் நோக்கில், மனுதாக்கல் செய்துள்ளவர்களிடம் அமைச்சர் நேரு, ஆ.ராசா எம்பி. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தேர்தல் பணிக் குழுவினர் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனராம். 
இந்த பேச்சுவார்த்தையில் சமரசம் அடையாதவர்களை தனித்தனியாக அழைத்து, கட்சித் தலைவர் என்ற முறையில்
 சமரச பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், அதன் பிறகே திமுகவின் புதிய மா.செ.,க்கள் பட்டியல் வெளியாகும் என்றும் தெரிவிக்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.