விலாங்கு மீன்களை விட்டுவிட்டு நெத்திலி மீனுக்கு மட்டும் தடையா?

மலையாள திரையுலகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி என்பவர் யு-டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது தொகுப்பாளியிடம் அநாகரிக வார்த்தைகளை பேசியதாக அவர்மீது புகார் பதிவு செய்யப்பட்டது. காவல்துறை அவரை கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவித்தது. இவரது செயலுக்காக மலையாள தயாரிப்பாளர் சங்கம் இவருக்கு புதிய படங்களில் நடிக்க தற்காலிக தடை விதித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த நடவடிக்கையை மலையாள திரையுலகை சேர்ந்த சினிமா பெண்கள் நல அமைப்பு வரவேற்றுள்ளது.

அதேசமயம் இதற்கு முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிவின்பாலி நடித்து வரும் படவேடு இயக்குனரான லிஜு கிருஷ்ணா என்பவர் அந்த படத்தில் நடித்த துணை நடிகை ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி அதனால் போலீசிலும் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அதேபோல தயாரிப்பாளரும், நடிகருமான விஜய்பாபு தனது படத்தில் பணியாற்றிய துணை நடிகை ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்ததை தொடர்ந்து, அந்த பெண்ணின் அடையாளத்தை சோசியல் மீடியா மூலமாக வெளிப்படுத்தும் இன்னொரு தவறையும் செய்தார். இந்த வழக்கில் அவர் தேடப்பட்டபோது வெளிநாட்டிற்கு சென்று தலைமறைவாக இருந்தார். பின் கேரளா திரும்பி கைதாகி ஜாமினில் வெளிவந்தார்.

ஆனால் லிஜூகிருஷ்ணா மற்றும் விஜய்பாபு இவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு தடையை ஏன் விதிக்கவில்லை. ஸ்ரீநாத் பாஷி எந்த பின்புலமும் இல்லாதவர் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதா.? அவருக்கு தடை விதித்தது போன்று மற்ற இருவர் மீதும் உடனடியாக படங்களின் நடிக்க படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சினிமா பெண்கள் நல அமைப்பினர் வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.