குழந்தைக்கு மொட்டை போட்டுவிட்டு திரும்பியபோது விபரீதம்; ட்ராக்டர் குளத்தில் கவிழ்ந்து 27 பேர் பலி!

வடமாநிலங்களில் இன்னும் பொதுமக்களை ஏற்றிச்செல்ல ட்ராக்டர்களை பயன்படுத்துகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம், கதம்பூர் என்ற இடத்திலிருக்கும் கோயிலுக்குச் சென்றுவிட்டு ட்ராக்டர் ஒன்றில் பக்தர்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்கள் குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக சென்றிருந்தனர். ட்ராக்டரில் 50-க்கும் அதிகமானோர் இருந்தனர். ட்ராக்டர் பதுனா என்ற கிராமத்திற்கு அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த குளத்தில் கவிழ்ந்தது. உடனே கிராம மக்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினர் மற்றும் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால் குளத்தில் மூழ்கி 11 குழந்தைகள் உட்பட 27 பேர் இறந்துவிட்டனர். இறந்தவர்களில் 11 பேர் பெண்கள். இது தவிர 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

மீட்புப்பணி

அவர்களை போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மாவட்ட நீதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணிகளை பார்வையிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், “விபத்துப் பகுதியில் மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன. தயவு செய்து ட்ராக்டர்களில் மக்களை ஏற்றிச்செல்லாதீர்கள். ட்ராக்டர்களை விவசாயத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விபத்து தொடர்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “என் நினைவுகள் அனைத்தும் விபத்தில் இறந்தவர்களைப் பற்றியும், அவர்கள் உறவினர்களைப் பற்றியுமே கவலையில் ஆழ்ந்துள்ளது. இறந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.