இலங்கையர்களுக்கு ஜப்பானில் ஆயிரம் பராமரிப்பு ஊழியர்களுக்கான சந்தர்ப்பம்

ஜப்பானில் பராமரிப்பு சேவை பிரிவில் 1000 க்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் அடுத்த வருடத்தில் இலங்கை தொழிலாளர்களுக்கு கிடைக்கவிருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானில் க்ளோபல் ட்ரஸ்ட் நெட்வொர்க் Global Trust Network நிறுவனத்துடன் நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு அந்த நிறுவனம் உடன்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் விரைவாக 150 ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு இந்த நிறுவனம் உடன்பட்டுள்ளது.

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் கூடுதலான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதே அமைச்சரின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இந்த நிறுவனத்தின் தலைவர் ஹிருயுக்கி கோடோ Hiroyuki Goto, பயிற்சி ஊழியர் பிரிவின் முகாமையாளர் யுக்கா குவாரா Yuka Kuwahara உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் தெரிவித்ததுடன், அடுத்த வருடத்தில் 1000 பராமரிப்பு ஊழியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அந்த நிறுவனம் உடன்பட்டிருப்பதாகவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.