உண்ணாவிரதத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்: காரணம் என்ன?

நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் இது தொடர்பாக சில யூடியூப் சேனல்களுக்கும் பேட்டியும் அளித்திருந்தார். இதையடுத்து, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தனர். இதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதனிடையே, சிறையில் உள்ள சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். உண்ணாவிரதம் குறித்து சிறை அதிகாரிகளுக்கு அவர் அளித்த கடிதத்தை அவர்கள் வாங்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், அவரது உடல்நிலை மோசமானது. இதில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில், சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சவுக்கு சங்கர் அதனை கைவிட்டுள்ளார். பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுப்பை ரத்து செய்யக்கோரி எழுத்துப்பூர்வமான கடித்தத்தை சங்கரிடமிருந்து பெற்றுக்கொண்ட கடலூர் சிறை நிர்வாகம், கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதியளித்ததன் பேரில் அவர் போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.