உலகளவில் ரூ.200 கோடி ; அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் வசூலைக் கடந்த 'பொன்னியின் செல்வன்'

மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன்'.

இப்படத்திற்கு அமெரிக்க வாழ் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு ஒரு நாள் முன்னதாக ப்ரீமியர் காட்சிகளும் நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 4 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள வினியோக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 4 மில்லியன் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 32 கோடியே 40 லட்சம் ரூபாய்.

அமெரிக்காவில் இதுவரையில் வெளியான தமிழ்ப் படங்களில் அதிக வசூலை பெறப் போகும் படம் என்ற சாதனையும் இப்படம் நிகழ்த்தும் என்றும் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவில் மட்டுமல்லாது ஒரு சில வெளிநாடுகளிலும் இப்படத்தின் வசூல் முந்தைய சில தமிழ்ப் படங்களின் வசூலை மிஞ்சி வருகிறதாம்.

உலக அளவில் கடந்த மூன்று நாட்களின் வசூல் 200 கோடியைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதிக்குள் இப்படத்தின் வசூல் 500 கோடியைக் கடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.