காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்து விழிப்புணர்வு: பேருந்துகளில் கண்கவர் விளம்பரம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பரம் செய்யப்பட்டு பேருந்துகள், சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து இன்று இயக்கப்படுகின்றன. 
 
சென்னை மாநகரில் முதல் கட்டமாக, காலை உணவுத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகளும், புதுமைப்பெண் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகள் என 10 பேருந்துகள் ரோஸ், மஞ்சள், நீலம், பச்சை ஆகிய வண்ணங்களில் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து விழிப்புணர்வு பேருந்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளி குழந்தைக்கு உணவு ஊட்டிவிடுவது போல் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இவை, பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 

இந்நிகழ்வில், போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம் தலைமையில், போக்குவரத்து ஊழியர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த 10 பேருந்துகளும், அம்பத்தூர் இருந்து வேளச்சேரிக்கும், திருவொற்றியூரில் இருந்து கோவளம், மத்திய பணிமனையில் இருந்து அண்ணா சதுக்கம், தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம், பிராட்வேவில் இருந்து பூந்தமல்லி, திருவொற்றியூரில் இருந்து திருவான்மியூர், கலைஞர் நகரில் இருந்து கேளம்பாக்கம், திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி, திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. 

மேலும், வருங்காலங்களில் தமிழக அரசின் மற்ற துறைசார்ந்த திட்டங்களும் பேருந்துகளில் விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.