நிலக்கரி இறக்குமதி விவகாரம் – ராமதாசுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

சென்னை: நிலக்கரியை இறக்குமதி செய்வதில் தமிழ்நாடு மின்சார வாரியம் அவசரம் காட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி இருந்த நிலையில், தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்,”மத்திய அரசு 2022-23-ஆம் ஆண்டுக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, 22 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்தியது. அதன்படி 2022-23ஆம் ஆண்டில், மூன்று காலாண்டில் சமமாக இறக்குமதி செய்யும்படி முடிவு செய்து, 6 லட்சம் டன்கள் நிலக்கரியை, டன் ஒன்றுக்கு 143 டாலர் (5% GST உட்பட) என்ற அளவில் இறக்குமதி செய்ய உத்தரவு வழங்கியது.

முதல் காலாண்டில் எஞ்சிய 1.3 லட்சம் டன் நிலக்கரியை, மத்திய அரசின் மூலம் டன் ஒன்றுக்கு 203 டாலர் என்ற அளவில் இறக்குமதி செய்து தர தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது. எதிர்வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நிலக்கரி தேவையை ஈடு செய்யும் வகையில், 7.3 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யும் வகையில், ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, 7 ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன.

பரிசீலனைக்குப்பின் விலைப்புள்ளிகள் திறந்து எதிர்மறை விலைப்புள்ளிகள் மூலம் முடிவு செய்ய குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும். கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட பின் நிலக்கரி வந்து சேர குறைந்தது 45 நாட்கள் தேவை. எனவே தற்பொழுது கோரப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் மூலம் பிப்ரவரி மாதம்தான் நிலக்கரி பெற முடியும். மேலும் ஒப்பந்தப்புள்ளிகள் முடிவு செய்யும் நேரத்தில் நிலக்கரி தேவை, இருப்பு மற்றும் விலை ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் முடிவு செய்யப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மின் நிலையங்களில் உள்நாட்டு நிலக்கரியுடன் கலந்து பயன்படுத்துவதற்காக 7.3 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது. நிலக்கரி இறக்குமதிக்கு மின்வாரியம் இவ்வளவு அவசரம் காட்டுவது தேவையற்றது.

மின்வாரியத்திடம் 4.8 லட்சம் டன் வெளிநாட்டு நிலக்கரி கையிருப்பு உள்ளது. இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் பயன்படுத்தப்படும். 6 மாதங்களுக்குப் பிறகு பயன்படுத்துவதற்கான நிலக்கரியை இப்போதே இறக்குமதி செய்வது புத்திசாலித்தனம் அல்ல.

பன்னாட்டு சந்தையில் நிலக்கரி விலை அதிகமாக உள்ளது. நிலக்கரிக்கான தொகை டாலரில்தான் வழங்கப்பட வேண்டும். அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், டன்னுக்கு ரூ.1000 வரை மின்சார வாரியத்திற்கு கூடுதலாக செலவாகக் கூடும்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு பயன்படுத்துவதற்கான நிலக்கரியை இப்போதே இறக்குமதி செய்து சேமித்து வைப்பது அதன் தரத்தையும் பாதிக்கும். எனவே, நிலக்கரி இறக்குமதி செய்வதை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் ஒத்தி வைக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.