வேற வழியே இல்ல Southல் சேர்ந்துட வேண்டியதுதான் – சல்மான் கான் எடுத்த முடிவு

நடிகர் பிரித்விராஜ் இயக்கி மோகன்லால் நடித்த படம் லூசிபர். மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இந்தப் படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்ய தயாராகினர் பலர். அந்தவகையில் தெலுங்கில் சிரஞ்சீவியும், சல்மான் கானும் இணைந்து லூசிபர் படத்தின் ரீமேக்கில் நடிக்கின்றனர். படத்துக்கு ‘காட்பாதர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நயன்தாராவும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். படத்தை மோகன் ராஜா இயக்கியிருக்கிறார்.

இவர் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன். தமிழில் ஜெயம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இவர் ரீமேக் செய்வதில் கிங் என ரசிகர்கள் மத்தியில் கருத்து உண்டு. தமிழிலும் இவர் அதிகம் ரீமேக் படங்களே செய்திருக்கிறார். எனவே லூசிபர் ரீமேக்குக்கு மோகன் ராஜாதான் சரியாக இருப்பார் என சிரஞ்சீவி முடிவெடுத்தார். விறுவிறுப்பாக நடந்துவந்த இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் நாளை (அக் 5) வெளியாகவுள்ளது.

இதனையொட்டி படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. அந்தவகையில் மும்பையில் நடந்த ப்ரோமோஷனில் கலந்துகொண்ட சல்மான் கான் பேசுகையில், “உங்கள் படங்கள் (தென்னிந்திய படங்கள்) இங்கே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் எங்கள் படங்கள் அங்கு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதற்கு தென் மாநிலங்களை சேர்ந்த பெரும் நட்சத்திரம் தேவை. மக்கள் ஹாலிவுட்டுக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால் நான் தென்மாநிலங்களுக்குத்தான் செல்ல விரும்புகிறேன்.

பாலிவுட் நடிகர்களும், தென்னிந்திய நடிகர்களும் ஒன்றிணைந்தால் அதிகமான ரசிகர்களுக்கு படம் சென்று சேரும். சிரஞ்சீவி ரசிகர்கள் என் படத்தையும், என் ரசிகர்கள் சிரஞ்சீவி படத்தையும் பார்ப்பார்கள். இதன் மூலம் எளிதாக 3,000த்திலிருந்து 4,000 கோடி ரூபாய்வரைக்கும் வசூலாகும். ஆனால், நாம் ரூ.300 – 400 கோடி ரூபாய் வசூலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

Chiranjeevi

பாலிவுட்தான் இந்திய சினிமாவின் அடையாளம் என்று பரவலான கருத்து இருந்தது.  ஆனால் தென்னிந்தியாவிலிருந்து வெளியான பாகுபலி சீரிஸ் படங்கள், கேஜிஎஃப் சீரிஸ் படங்கள், புஷ்பா, ஆர்ஆர்ஆர், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் பாலிவுட்டிலும் வசூல் வேட்டை நடத்திவருகின்றன. அதேசமயம் பாலிவுட் படங்கள் தென்னிந்தியாவில் எடுபடுவதில்லை. இதன் மூலம் இந்திய சினிமாவின் முகமாக தென்னிந்திய சினிமாக்கள் மாறிவிட்டதாக திரை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி சல்மான் கானின் இந்தப் பேச்சு அதனை நிரூபிக்கும் விதமாகவே இருக்கிறது என்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.