நண்பருடன் சேர்ந்து கொண்டு தனது குழந்தையை கலைக்க நடிகை திவ்யா முயற்சி செய்வதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் நடிகரும் அவரது கணவருமான அரணவ் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் நைனா முகமது என்கின்ற அரணவ். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றில் நடிகராக நடித்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவரும் தனியார் தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். மேலும், திவ்யா இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி, இந்தாண்டு ஜூன் மாதம் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் சென்னை வடக்கு மாவட்டம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துள்ளனர். இருவரும் மூன்று மாதமாக ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த நிலையில், நடிகை திவ்யா கருவுற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை திவ்யா, கணவர் அரணவ் தன்னை தாக்கியதாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரச்சனை உருவாகியது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் திவ்யாவின் கணவரும் நடிகருமான அரணவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது மனைவி திவ்யா அவரது நண்பர் ஈஸ்வர் என்பவருடன் இணைந்து மூன்று மாத கருவை கலைக்க நாடகம் நடத்துவதாக கூறியுள்ளார். எனவே இது சம்பந்தமாக மனைவி திவ்யா, நண்பர் ஈஸ்வர் மற்றும் இதற்கு துணை போன மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அரணவ், “மனைவி திவ்யாவிற்கும் எனக்கும் திருமணம் நடைபெற்ற அன்றுதான் அவளுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை பிறந்ததும், விவாகரத்து ஆகியுள்ளதும் தெரியவந்தது. இதனை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்தேன். எனினும் காதல் காரணமாக இதனை ஏற்றுக்கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், “நான் தாக்கியதாக எனது மனைவி கூறும் நேரத்தில், நான் அவருடன் இல்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இதனை காவல்துறை கேட்கும்போது காண்பிக்க தயாராக இருக்கிறேன். நான் அடித்ததால்தான் அவருக்கு ரத்த போக்கு ஏற்பட்டதா அல்லது எனது குழந்தையை அவரது நண்பர் ஈஸ்வர் என்பவருடன் சேர்ந்து கலைக்க முயற்சி நடக்கிறதா என்ற சந்ததேகம் எனக்கு இருக்கிறது. ஈஸ்வர் என்பவர் எனக்கு நன்மை செய்வதாக கூறி இதுபோன்று செயலில் ஈடுபடுகிறார். என்னை அவர் அடிக்கடி மிரட்டி வருகிறார்.
நான் விவாகரத்து செய்துவிடுவேன் என எங்கும் கூறவில்லை. மனைவி திவ்யாவுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். அவர் கருவில் இருக்கும் குழந்தை எனக்கு பத்திரமாக வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
