10ம் நூற்றாண்டில் ராஜமுந்திரி இல்லை! ராஜமகேந்திரபுரம் என்று அழைக்கப்பட்டது!
பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் படம் வெளியானது. இந்த படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்து மன்னராக சித்தரிப்பதாகவும் இதன் வாயிலாக தமிழர்களின் அடையாளத்தை மாற்றுகின்றனர் என பேசி இருந்தார். இக்கருத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
வெற்றிமாறனுக்கு ஆதரவாக நடிகர் கமலஹாசன் இந்து மதம் என்ற பெயர் ராஜ ராஜ சோழன் காலத்தில் இல்லை. சைவம், வைணவம், சமணம் தான் இருந்தது. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் என பேசி இருந்தார். ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என்றால் ஜாதி வேறுபாடுகளுக்கு இந்து மதம் தான் காரணம் என இவ்வளவு நாள் பேசி இருந்ததை தவறு என கமலஹாசன் ஒப்புக் கொள்வாரா என பாஜகவினர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் கமலின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளரும் ஓய்வு பெற்ற மத்திய அரசு செயலாளருமான பி.ஏ.கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் “கமலுடன் கலந்துரையாடினேன். பத்தாம் நூற்றாண்டில் ராஜமுந்திரி என்ற இடம் இல்லை ராஜமகேந்திரபுரம் என்றுதான் இருந்தது. அதுபோல தான் இந்து மதம் பற்றி நான் சொன்ன கருத்து. ராஜராஜ சோழன் காலத்தில் சிவனை வழிபட்டவர்கள் சைவர்கள் என்றும் விஷ்ணுவை வழிபட்டவர்கள் வைணவர்கள் என்றும் அழைத்தனர். இதைத்தான் நான் கூறினேன். இந்து மதம் இருப்பதை நான் மறுக்கவில்லை” என கமல் கூறியதாக பதிவிட்டிருந்தார். இந்த கருத்தினை பொதுவெளியில் பதிவிடவும் கமலஹாசன் அனுமதித்தார் என பி.ஏ.கிருஷ்ணன் கூறியுள்ளார்.
இவருடைய கருத்திலிருந்து காலத்திற்கு ஏற்றார் போல் இந்து மதத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதே தவிர வேறு எதுவும் மாறவில்லை. அது போல தான் கமலஹாசனின் கருத்தும் காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றி உள்ளார் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.