சிதம்பரம்: சிதம்பரம் பஸ் நிறுத்தத்தில் 12ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்குள்ள நிழற்குடையில் பள்ளி மாணவி ஒருவருக்கு மாணவன் தாலி கட்டிய வீடியோ நேற்று முன்தினம் முதல் வைரல் ஆகி வருகிறது. சம்பந்தப்பட்ட மாணவி, பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கீரப்பாளையம் அருகே வட ஹரிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர். அங்குள்ள தனியார் பாலிடெக்னிக்கில் ஆட்டோ மொபைல் 2ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இதனையறிந்த பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சிதம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட குழந்தைகள் நல பிரிவு அலுவலர் ரம்யா, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மூலம் சம்பந்தப்பட்ட மாணவியையும், மாணவனையும், அவர்களுடைய பெற்றோரையும் காவல் நிலையம் வர வைத்து விசாரித்தனர்.
