வருகிற 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை பட்டாசு விபத்து இல்லாமலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘குறைந்த ஒலியுடனும் (சத்தம்), குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். திறந்த வெளியில் ஒன்று கூடி, கூட்டமாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளிடம் முன்அனுமதி பெற வேண்டும். இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை, அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.