நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 287 மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த மாணவிகளுக்கு நேற்று இரவு வழக்கம்போல தோசையுடன் சாம்பார் உணவாக வழங்கப்பட்டது.
உணவு சாப்பிட்ட மாணவிகளில் 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவை சோதித்த பொழுது சாம்பாரில் பூரான் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து மாணவிகள் கூறும்போது, நேற்று இரவு தோசையும், சாம்பாரும் வழங்கப்பட்டது. இதில் சாம்பாரில் பூரான் இருந்தது. இதை எடுத்து சாப்பிட்ட ஒவ்வொரு மாணவிகளுக்கும் அடுத்தடுத்து மயக்கம் ஏற்பட்டது. கவனமாக வழங்கப்படாததால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இரவில் மாணவிகள் சாப்பிட்ட உணவில் பூரான் கடந்ததால் மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.