கன்னியாகுமரியில் இருக்கை கழன்று விழுந்ததால் ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பயணி!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து தமிழக கேரள எல்லை பகுதியான பளுகல் பகுதிக்கு நேற்று காலையில் தமிழ்நாடு அரசு பேருந்து (தடம் எண் 84ஏ) ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பேருந்தில் தஞ்சாவூரை சேர்ந்த செல்வராஜ் உள்பட பல பயணிகள் பயணம் செய்தனர். செல்வராஜ் மேல்புறம் அருகே வட்டவிளை பகுதியில் தங்கி வரும் ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் பேருந்தின் பின்பக்க வாசல் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். பேருந்து களியக்காவிளை அருகே உள்ள இடைக்கோடு அம்பேத்தன்காலை பகுதியில் சென்ற போது செல்வராஜ் அமர்ந்திருந்த இருக்கை திடீரென கழன்று பின்நோக்கி விழுந்தது. அப்போது அதில் அமர்ந்திருந்த செல்வராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்ததால் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தில் இருந்து வாசல் வழியாக செல்வராஜ் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தார். இதை கண்ட சக பயணிகள் கூச்சலிட்டனர். உடனே ஓட்டுநர் அந்த பேருந்தை நிறுத்தினார்.

தொடர்ந்து படுகாயம் அடைந்த செல்வராஜை பயணிகள் மீட்டு அதே பேருந்தில் ஏற்றி கண்ணுமாமூடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று விழுந்து ரேஷன் கடை ஊழியர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.