பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த 13 கிராம மக்களிடம் அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னையில், 2-வது புதிய பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 13 கிராமங்களை உள்ளடக்கி 4,750 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களுக்கு பல்வேறு அரசியல் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டு அறிந்து வருகின்றனர்.
இந்த புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் முழுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகும் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது பணிகளை முடித்து இரவு நேரங்களில் தொடர்ந்து 80 நாட்களுக்கு மேலாக போராடி வந்தனர். இவர்களை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இதனால், கிராம மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வந்தது. மேலும், அடுத்த கட்ட போராட்டமாக வருகின்ற 17-ம் தேதி 13 கிராம மக்கள் சட்டசபை நோக்கி பேரணியாக செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தி வரும் மக்களிடம் அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.