நாடு முழுவதும் ‘அமுல்’ என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு, குஜராத் தவிர அனைத்து மாநிலங்களிலும் முழு கொழுப்பு நிறைந்த பால் மற்றும் எருமைப் பால் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வை அடுத்து முழு கொழுப்பு நிறைந்த பால் லிட்டருக்கு ரூ.61 லிருந்து ரூ.63 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பால் விலையை 2 ரூபாய் வரை அமுல் நிறுவனம் உயர்த்தியிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் விலை ஏற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து குஜராத் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் சோதி கூறும்போது, கால்நடை தீவன செலவு கடந்த ஆண்டை விட தோராயமாக 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அமுல் நிறுவனத்தை இயக்குவதற்கும், பால் உற்பத்திக்கும் ஆகும் ஒட்டுமொத்த செலவு அதிகரித்திருப்பதை ஈடு செய்யும் வகையில் இந்த விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ‘அமுல்’ மற்றும் ‘மதர் டெய்ரி’ ஆகிய இரண்டு நிறுவனங்களும் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.