கன்னியாகுமரியில், ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அஸ்வின் (11) அதங்கோடு பகுதியிலிலுள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24-ம் தேதி பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்தார்.
இந்நிலையில், அஸ்வினுக்கு 25-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அவரது தாயார் ஷோபியா களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், மாணவன் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவன் அஸ்வின் ஆசிட் திரவம் உட்கொண்டதாகவும், அதனால் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக சிறுவனின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இந்நிலையில், சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் நெய்யாற்றங்கரை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.