மனைவிக்கு கள்ளக்காதலன்… மகளுக்கு காதலன்… எதிர்த்த அப்பாவை இரும்பு கம்பியால் அடித்து பெட்ரோல் ஊற்றி கொலை..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குருவி நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சவரிமுத்து. இவரது மகன் ஞானசேகர் (42). மீன் வியாபாரம் செய்து வந்த இவருக்கு சலைத்ராணி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் வீட்டு அருகில் மரப்பட்டறை நடத்தி வரும் கருப்பசாமி (அ) கார்த்திக் (24) என்ற இளைஞரும் ஞானசேகரின் 16 வயது நிரம்பிய மூத்த மகளும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாகக் தெரிகிறது.

இந்த காதலுக்கு ஞானசேகர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அச்சங்குளம் அருகே காற்றாடி ஆலைக்கு செல்லும் சாலை அருகே உள்ள கிடங்கில் எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அது மீன் வியாபாரி ஞானசேகர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஞானசேகர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஞானசேகரின் மனைவி, மகள் மற்றும் மகளின் காதலன் ஆகியோருக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகமடைந்த நிலையில், விசாரணையை தீவிரப்படுத்திய போது அதிர வைக்கும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விசாரணையில், ஞானசேகரன் மனைவி சலைத்ராணிக்கும், கார்த்திக்கிற்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது. இதனை ஞானசேகரன் கண்டித்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மூத்த மகளும் கார்த்திக்கும் நெருங்கி பழகி வந்ததை தெரிந்து கொண்ட ஞானசேகரன் அதையும் வன்மையாக கண்டித்துள்ளார்.

தனது மனைவி, மகளை இனி கார்த்திக்குடன் பேசக்கூடாது என்று திட்டி வந்துள்ளார். தங்கள் உல்லாசத்திற்கு ஞானசேகரன் தடையாக இருப்பதால் அவரை கொலை செய்ய சலைத்ராணி, அவரது மகள், கார்த்திக் மூவரும் முடிவு செய்துள்ளனர். இதையெடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஞானசேகரனை, கார்த்திக் கார் ஏற்றிக் கொள்ள முயற்சி செய்த போது அது தோல்வியில் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து ஞானசேகரை கொலை செய்ய அவரது மனைவி, மகள் மற்றும் மகளின் காதலன் கார்த்திக் மூன்று பேரும் திட்டம் போட்டுள்ளனர்.

இரவு ஞானசேகர் தூங்கியதும். அவரது மூத்த மகள் தனது காதலன் கார்த்திக்கிற்கு ‘தந்தை உறங்கி விட்டார் வீட்டுக்கு வரவும்’ என மெசேஜ் அனுப்பி உள்ளார். இதையடுத்து கார்த்திக்கும் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து ஞானசேகரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர். அவர் உயிரிழந்தது தெரிந்ததும் சடலத்தை காரில் ஏற்றிக்கொண்டு அச்சங்குளம் பகுதியில் போட்டு பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.