பிரிட்டன் அரசில் மீண்டும் குழப்பம் 45 நாளில் பதவி விலகினார் பிரதமர்| Dinamalar

லண்டன்:பொருளாதாரத்தை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், சொந்தக் கட்சியினர் கடும் எதிர்ப்பை அடுத்து, பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், 45 நாட்களில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரத்துக்குள் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கடந்த ஜூலையில் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக பதவியேற்க முடியும். அதன்படி, கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது.

இதில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் போட்டியிட்டனர். இதில் வென்று நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற சில நாட்களில், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்தார். இரங்கல் நிகழ்ச்சிகள், இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளால், பிரதமர் லிஸ் டிரஸ் பெரிய அளவில் எந்தப் பணிகளையும் செய்ய முடியவில்லை.

இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கான தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பல்வேறு வரிச் சலுகைகள் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்றன.

ஆனால், இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பங்குச் சந்தை சரிவு போன்றவற்றால், பிரிட்டன் பொருளாதார மந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கவாசி குவார்தெங்க் நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய நிதி அமைச்சராக ஜெர்மி ஹண்ட் நியமிக்கப்பட்டார்.

இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து வரிச் சலுகைகளையும் ஹண்ட் ரத்து செய்து அறிவித்தார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய வம்சாவளியான உள்துறை அமைச்சர், சுயெல்லா பிரேவர்மேன் தன் பதவியை ராஜினாமா செய்தார். இது பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

இந்நிலையில், லிஸ் டிரஸ் நேற்று கூறியதாவது:

கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதில் நான் தவறிவிட்டேன். இந்த நிலையில், என் பதவியைத் தொடர விரும்பவில்லை.

இது குறித்து மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்து என் முடிவை தெரிவித்தேன். மேலும், கட்சியில் தலைவர் தேர்தலை நடத்தும் பிரிவின் தலைவர் சர் கிரஹாம் பார்டியையும் சந்தித்து பேசினேன்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய தலைவரை அடுத்த வார இறுதிக்குள் தேர்வு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டேன். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, இந்தப் பதவியில் இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தால், 45 நாட்களில் தன் பதவியில் இருந்து விலகும் சூழ்நிலை லிஸ் டிரஸ்சுக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் பல குழப்பங்கள் உள்ளன. கட்சித் தலைவர் தேர்தலில் லிஸ் டிரஸ்சிடம் தோல்வியடைந்த ரிஷி சுனக்கை தலைவராக தேர்ந்தெடுக்க பல எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பழமைவாதக் கட்சியை சேர்ந்தவரும், நேற்று முன் தினம் உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியவருமான சுயெல்லா பிரேவர்மேன் பெயரும் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது.

இதற்கிடையே போரிஸ் ஜான்சனை மீண்டும் தலைவராக்கும்படி, அவருடைய ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் பார்லிமென்டுக்கு புதிதாக தேர்தலை நடத்தும்படி எதிர்க்கட்சியான, தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

லிஸ் டிரஸ்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.