கேரளாவில், மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பெற்ற தந்தையே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் திருச்சூர் கேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுலைமான் (60). இவருடைய மனைவி செரீனா. இவர்களுடைய மகன் சகத் (28). இவர், மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு செரீனா வெளியே சென்றார். அப்போது வீட்டின் வராண்டாவில் சகத் இருந்துள்ளார்.
அப்போது, பெட்ரோல் கேனுடன் அங்கு வந்த சுலைமான், திடீரென மகன் சகத் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். இதனால் சகத் அலறி துடித்தார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் ஓடி வந்து சகத்தை மீட்டு சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதனை தொடர்ந்து, தப்பி ஓடிய சுலைமானை திருச்சூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தினம், தினம் மகன் படும் துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாததால் உயிரோடு எரித்துக் கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார்.