சிவகங்கையில், 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணியும், அவருடைய தாயாரும் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே நெஞ்சத்தூரை சேர்ந்த குமரேசன் மனைவி நிவேதா(20). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்சில், நிவேதா சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவருடன், தாய் விஜயலட்சுமி சென்றனர். செங்குளம் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்ற போது, எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கர்ப்பிணி நிவேதா மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆம்புலன்ஸ் டிரைவர் மலையரசன்(27), பணியாளர் திருச்செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கர்பிணி நிவேதா, அவரது தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.