'வாத்தி' – தொடர்ந்து கண்டு கொள்ளாத தனுஷ்

தமிழ், தெலுங்கில் தனுஷ் நடித்து வரும் படம் 'வாத்தி'. தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

படக் குழுவுக்கும் தனுஷுக்கும் இடையில் பட வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பில் ஏதோ ஒரு முரண்பாடு ஏற்பட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி பரவியிருந்தது. அந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 19ம் தேதி வெளியான போதே, அந்த போஸ்டரை தனுஷ் கண்டு கொள்ளவில்லை. அதை ரிடுவீட்டும் செய்யவில்லை.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு தீபாவளி தினத்தன்று படத்தின் புதிய போஸ்டரை தீபாவளி வாழ்த்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அந்த போஸ்டரில் வெளியீட்டுத் தேதியைக் குறிப்பிடாமல் இருந்தனர். ஆனால், மதியத்திற்கு மேல் அதன் தயாரிப்பாளர் வெளியீட்டுத் தேதியுடன் கூடிய அதே போஸ்டரை மீண்டும் வெளியிட்டார்.

தனுஷ் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் 'வாத்தி' தான். ஆனால், இந்த படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவலையும் தனுஷ் கண்டு கொள்ளாதது அவரது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களோ, இயக்குனரோ எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.