கேரளாவில் பறவைக் காய்ச்சல்: நிலைமையை கண்காணிக்க விரைந்தது மத்திய குழு

திருவனந்தபுரம்: கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதை அடுத்து இதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அனுப்பி வைத்தது. இக்குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பறவைக் காய்ச்சல் பற்றிய பரிந்துரைகளையும் குழு சமர்ப்பிக்கும். 

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரிபாத் நகராட்சியில் உள்ள வழுதானம் வார்டில் நோய் பரவுவதை தடுக்க 20,000 பறவைகளை அழிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். தொற்று அதிகம் பரவாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளாவில் பறவைக் காய்ச்சல்: முக்கிய விவரங்களை இங்கே காணலாம்:

– இறந்த பறவைகளின் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து கேரளாவில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

– நோயின் மையப்பகுதியிலிருந்து ஒரு கிமீ சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து பறவைகளும் அக்டோபர் 28 முதல் அழிக்கப்படும் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

– 20,471 வாத்துகள் கொல்லப்படும். கால்நடை மருத்துவர்களின் உத்தரவுகள் மற்றும் இது தொடர்பான மத்திய விதிமுறைகளின் கீழ் இந்த பணியை மேற்கொள்ள தலா 10 உறுப்பினர்களைக் கொண்ட எட்டு விரைவு நடவடிக்கை குழுக்கள் (ஆர்ஆர்டி) ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

– பறவைகளை கொல்லும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் பிரதிநிதிகள், வருவாய்த்துறை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

– இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர், ஹரிபாடு நகராட்சி, பள்ளிப்பட்டு ஊராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதாரத் துறை கண்காணிப்பு தொடரும்.

– நோய் பரவியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் பறவைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

– ஹரிபாத் நகராட்சி மற்றும் அருகிலுள்ள பல்வேறு ஊராட்சிகளில் வாத்து, கோழி, காடை உள்ளிட்ட நாட்டுப் பறவைகளின் முட்டை மற்றும் இறைச்சியை விற்பனை செய்யவும், சாப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

– இப்பகுதிகளில் உள்நாட்டுப் பறவைகளின் முட்டை மற்றும் இறைச்சியை யாரும் விற்கவோ அல்லது உட்கொள்ளவோ இல்லை என்பதை உறுதி செய்ய, பர்ஸ் ஸ்காட்ஸ் எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பறவைகள் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவும் வாய்ப்புகள் உள்ளதால், பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால், இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.