முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாள்; காங். தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் உள்ள இந்திரா நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று அஞ்சலி செலுத்தினார்கள். கட்சியின் புதிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மறைந்த இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனகார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தியின் தியாக நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

விவசாயம், பொருளாதாரம் அல்லது ராணுவம் எதுவாக இருந்தாலும் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றியதில் அவரது பங்களிப்பு ஒப்பிடமுடியாதது’ என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் ராகுல்காந்தி டிவிட்டரில், ‘பாட்டி உங்கள் மீதான அன்பு மற்றும் மதிப்பு இரண்டையும் என் இதயத்தில் சுமந்து கொண்டு இருக்கிறேன். உங்களது உயிரை தியாகம் செய்த இந்தியாவை சிதைப்பதற்கு அனுமதிக்கமாட்டேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.