எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கிறது. சில வருடங்கள் கைது நடவடிக்கை குறைவாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு 10க்கும் மேற்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை 500க்கும் அதிகமான விசைப்படகுகளில் சுமார் 2000க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
நேற்று இரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து மீனவர் நலச்சங்கத் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்த அவர்கள், மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாளையில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
அது மட்டுமின்றி செவ்வாய்க்கிழமை அனைத்து மீனவர்களும் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
newstm.in