எங்களுடைய கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலியாவை விட்டு செல்கிறோம்: விராட் கோலி உருக்கம்

புதுடெல்லி: எங்களுடைய கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலிய கடற்கரைகளை விட்டுச் செல்கிறோம் என விராட் கோலி உருக்கமாக கூறியுள்ளார். 8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டு ஓவலில் நேற்று நடந்த 2-வது அரை இறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து டுவிட்டரில் விராட் கோலி கூறியதாவது: எங்களுடைய கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலிய கடற்கரைகளை விட்டுச் செல்கிறோம்.

எங்கள் மனதில் வேதனை குடிகொண்டுள்ளது. ஆனால் ஓர் அணியாக நிறைய நல்ல நினைவுகளை எடுத்துச் செல்கிறோம். இதிலிருந்து எங்களை இன்னமும் மேம்படுத்திக் கொள்வோம். மைதானத்துக்கு வருகை தந்து எங்களை ஊக்குவித்த ரசிகர்களுக்கு நன்றி என்று கூறினார். இந்திய அணியின் சீருடையை அணிந்து நாட்டுக்காக விளையாடுவதில் எப்போதும் பெருமை கொள்வேன் எனவும் குறிக்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.