கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவோடை கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனகாம்பிகைக்குளத்தின் நீர் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ள போதிலும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
கனகாம்பிகை குள நீர் கொள்ளனவிலும் பார்க்க நீர்மட்டம் காணப்படுகின்றமையால் மேலதிக நீர் வான் பகுதியூடாக வெளியேற்றப்படுகின்றது. இதனால் குளத்தின் தாழ்நில பகுதியில் உள்ள மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரதேச பாதிப்புக்கள் தொடர்பில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மதிப்பீடுகளை மேற்கொண்டுவருவதாக எமது ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, விளாவோடை கிராமத்திற்கு செல்லும் பாதையில் உள்ள பாதுகாப்பற்ற பாலத்தின் மேலாக மழை வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் கிராமமக்கள் போக்குவரத்து பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.