சீனாவில் கொரோனாவால் தினசரி 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு – தலைநகர் பீஜிங்கில் தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!

பீஜிங்,

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 10,729 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா 4ஆம் அலை ஏற்பட்டுள்ளதா என்ற அச்சம் நிலவுகிறது.

பீஜிங்கின் 21 மில்லியன்(2.10 கோடி) மக்கள் தினசரி கொரோனா சோதனைக்கு உட்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் 118 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சீனாவின் தலைநகர் பீஜிங் நகர பூங்காக்களை மூடியுள்ளது மற்றும் பிற கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சீனாவின் குவாங்சோ மற்றும் சோங்கிங் நகரங்களில் ஊரடங்கு காரணமாக ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் முடங்கும் நிலையில் இருந்தனர். பல நகரப் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறியுள்ளன. சில பகுதிகளில் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை மற்றும் சுகாதார ஊழியர்களுடன் சண்டையிடுகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.