ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை காண்போம்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, சாந்தன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல், இந்த 6 பேரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு
கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், மற்ற கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
சீமான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
ராஜிவ் காந்தி வழக்கில், மீதமுள்ள 6 தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
கி.வீரமணி, திராவிடர் கழக தலைவர்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்; தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டது சட்ட பிழை என்பதற்கான சான்றே இந்த தீர்ப்பு. உச்சநீதிமன்றத்தின் இந்த 2 ‘குட்டு’கள் போன்ற நடவடிக்கைக்குப் பிறகாவது தமிழ்நாடு ஆளுநர், பதவி விலகுவாரா? என்பது தான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்!
பழ. நெடுமாறன், உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவனர்
ராஜிவ் காந்தி கொலை வழகில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது; இதற்காக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அரசுக்கும், இதற்கு முன்பு இருந்த அரசுக்கும் நன்றி. விடுதலையான 6 பேரில் 4 பேர் இலங்கை தமிழர்கள்.அவர்களை உறவினர்களுடன் சேர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் வழிவகை செய்ய வேண்டும்; சிறப்பு முகாம்களில் அவர்களை அடைக்க வேண்டாம்.
ராமதாஸ், பாமக நிறுவனர்
ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.