தமிழகத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்? – அமைச்சர் பொன்முடி விளக்கம்!

தமிழகத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாது என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என, உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக எதிர்ப்புத் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனைத்து கட்சித் தலைவர்களும் ஒப்புதல் தெரிவித்தனர்.

கூட்டத்திற்கு பிறகு, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அவசர அவசரமாக மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. பாஜகவுக்கு சமூக நீதி கொள்கையில் நம்பிக்கை இல்லை. தமிழக அரசின் தீர்மானத்திற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. அதிமுக கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.

கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும் அதிமுக ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம். பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படுவதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது அதிமுகவும், பாஜகவும் தான். 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படாது. மேலும், 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.