மல்லிகார்ஜுன கார்கே தலைவரான பின்னர் முதன்முறையாக நாளை மறுநாள் காங். செயற்குழு கூட்டம்: 2024 தேர்தல் குறித்து ஆலோசனை

புதுடெல்லி: வரும் 2024 மக்களவை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (நவ. 14) டெல்லில் நடைபெறுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே கடந்த சில வாரங்களுக்கு முன் பொறுப்பேற்றார். மாநிலம் வாரியாக கட்சியின் தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் கட்சித் தலைவராக கார்கே தலைமைப் பதவியை ஏற்றபின்னர், முதன்முறையாக நாளை மறுநாள் (நவ. 14) காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.

அந்த கூட்டத்தில் தேர்தல் வியூக குழுவின் உறுப்பினர்கள், தலைவர் கார்கேவிடம் செயற் குழுவின் பணிகள் மற்றும் 2024 தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். இந்த செயற்குழுவில் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கேசி வேணுகோபால், அஜய் மக்கான், ரன்தீப் சுர்ஜேவாலா, பிரியங்கா காந்தி, சுனில் கனுகோலு ஆகியோர் பங்கேற்கின்றனர். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியே காங்கிரஸ் தேர்தல் நடைபெற்றது. அதேபோல் அந்தக் கூட்டத்தில் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிகாரமிக்க செயற் குழு ஒன்றை அறிவித்தது. அதன்படி அந்தக் குழு தனது முதல் கூட்டத்தை நாளை மறுநாள் நடத்தவிருக்கிறது. ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.