`என்னாலதானே இப்படி ஆச்சு' – நண்பனின் இறப்பை தாங்க முடியாமல் சக நண்பனும் தற்கொலை!

விழுப்புரத்தில் பைக்கில் சென்ற நண்பர்கள் இருவருக்கு, சில தினங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டிருந்தது. அதில் வண்டியில் பின் அமர்ந்து சென்ற நபர் இறந்துவிட்டார். இச்செய்தியை அறிந்து, பைக் ஓட்டி சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம்  செஞ்சி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்  சீனிவாசன் (வயது 20). இவர் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 20). இவர் செஞ்சியில் உள்ள தனியார் கொரியர் சர்வீசில் வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை செஞ்சியிலிருந்து பல்சர் பைக்கில் செஞ்சி விழுப்புரம் சாலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
image
அவர்கள் அங்கராயநல்லூர் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது. இதில் பின்னால் அமர்ந்து சென்ற சீனிவாசன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கை ஓட்டி சென்ற பிரபு படுகாயமடைந்து, உயிர் தப்பினார். அவரை சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சீனிவாசன் இறந்த செய்தி கேட்டு, பிரபு கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவரை மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று சரியான அவர் அன்றிரவு இரவு 12:00 மணி அளவில் அவரை, அவரது பெற்றோர் அவனை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
image
இந்நிலையில் நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பிறகு, நண்பன் இறந்துவிட்ட விரக்தியிலும் நண்பனின் இறப்புக்கு தானே காரணமாக இருந்ததாகவும் கருதிக்கொண்டு, வீட்டுக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த செஞ்சி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பர் இறந்ததால் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்த இளைஞரின் செயல், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவங்கள் குறித்து செஞ்சி போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.