கொட்டித்தீர்த்த கனமழை; வெள்ளக்காடான சீர்காழி – அமைச்சர்கள் நேரில் ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரேநாளில் 44 செ.மீ மழை கொட்டித் தீர்த்ததால் எல்லாப் பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், சீர்காழி அருகேயுள்ள மணிகிராமத்தில் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மெய்யநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை உடனே வழங்குமாறு  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

வெள்ளத்தில் தவிக்கும் சீர்காழியில் அமைச்சர்கள் ஆய்வு

கனமழை காரணமாக சீர்காழி  நகரம் மட்டுமின்றி சுற்றியுள்ள பல கிராமங்களும் முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்து தத்தளிக்கின்றன. தண்ணீரில் தவித்த குடியிருப்புப் பகுதிகளைச்  சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அரசின் 36 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிலையில் கனமழையால்  பாதிக்கப்பட்ட மணிகிராமம் பகுதியில், இன்று (13.11.2022) தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். குடியிருப்புகளில்  தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தனர். அப்போது அப்பகுதி மக்கள், “இரவு நேரத்தில் திடீரென  எங்கள் வீடுகளுக்குள் தண்ணீர்ப்  புகுந்ததால், வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. இனி அவற்றை எப்படி உருவாக்குவோம்? ஆதார் முதல் ரேஷன் கார்டுகள் வரை முக்கிய ஆவணங்கள், குழந்தைகளின் பள்ளிப் பாட புத்தகங்கள் என அனைத்து உடைமைகளையும் இழந்து தவிக்கிறோம்” என்றனர். இதனையடுத்து அனைத்து மாணவர்களுக்கும், புதிய புத்தகங்கள் வழங்கவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்து ஆவணங்களையும் உடனே வழங்கவும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் வருவாய்ததுறை அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.

வெள்ளத்தில் தவிக்கும் சீர்காழியில் அமைச்சர்கள் ஆய்வு

அமைச்சரின் ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, எம்.எல்.ஏ-க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.