அரக்கோணம்: அரக்கோணம் பழனிப்பேட்டையில் உள்ள இரட்டைக்கண் வாராவதியில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கடந்த சில நாட்களாக வடக்கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்தது. இதனால் நேற்று பழனிப்பேட்டையில் உள்ள இரட்டைக்கண் வாராவதி மற்றும் 3வது கண் வாராவதி பகுதியில் சுமார் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதனால், இரட்டைக்கண் வாராவதி வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். மூன்றாவது கண் வாராவதி வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
மழைக்காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பழனிப்பேட்டை இரட்டைக்கண் வாராவதி பகுதியில் நகராட்சி தலைவர் லட்சுமி ஆய்வு செய்தார். அங்கு, தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அங்கு வரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, பொறியாளர் ஆசீர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.