செந்தில்பாலாஜி பதவி நீக்கம்..? ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார்?

திமுக அரசின் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் நாளை மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாநில துணை தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.ராமலிங்கம் கூறியது;

பாஜக எழுச்சியாக நாட்டு மக்களுக்கு ஆதரவாக விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும். அரவக்குறிச்சியில் 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு தருவதாக கூறி கணக்கு காட்டி இருக்கிறார்கள். போலி நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே 1 லட்சம் பேருக்கும், தற்போது 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய். இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையை ஏற்று அமைச்சரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது முதல்வரின் பொறுப்பு. விசாரணை, தீர்ப்பு வரும் வரை அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மத்தியில் நம்பிக்கை வரும். 90% பணிகள் நிறைவேற்றி விட்டோம் என்பது பொய்.

வெள்ள வடிகால் பகுதிகள் 90 சதவீத பணிகள் முடித்து விட்டதாக சொன்னது பொய். இன்று பார்க்கும் அந்த காட்சிகள் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. நம்பிக்கை, நாணயத்துடன் இருக்க வேண்டும், கொஞ்ச காலத்துக்கு நல்லபடியாக இருக்க வேண்டும். அவர்களுடைய ஆட்சி காலத்தை முழுமையாக ஆள வேண்டும். இலவச மின் இணைப்பு பெற்ற பயனாளிகள் பெயர், முகவரி, ஆதார் எண்ணுடன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.