வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் பேரூராட்சி கடவூர் பிரிவு அருகே உள்ள ரங்கப்பநாயக்கன் குளத்தில் நேற்று முன்தினம் சிலர் ஒரு சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து இறைச்சி கழிவுகளை கொட்டினர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அந்த நபர்களை வாகனத்துடன் சிறைபிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அய்யலூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாண்டீஸ்வரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் சிறைபிடிக்கப்பட்ட வாகனம் மற்றும் நபர்களை பொதுமக்கள் விடுவித்தனர். இந்நிலையில், நேற்று அய்யலூரில் உள்ள இறைச்சிக் கடை உரிமையாளர்களை அழைத்து பேரூராட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட இறைச்சி கடைகள், அனைத்து கழிவுகளையும் தரம் பிரித்து வைக்குமாறு அறிவுரை கூறப்பட்டது. மேலும் தரம் பிரித்து வைக்கப்பட்ட கழிவுகளை பேரூராட்சி நிர்வாகமே அப்புறப்படுத்தும் என கூறப்பட்டது. இதுகுறித்து செயல் அலுவலர் பாண்டீஸ்வரி மற்றும் பேரூராட்சித் தலைவர் கருப்பன் கூறுகையில், நீர் நிலைகளில் இறைச்சி கழிவுகளை இனி யாரும் கொட்ட கூடாது. மீறுவோர் மீது பேரூராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றனர்.