திருடியதாக 6 பேருக்கு தர்மஅடி: சிகிச்சையில் இருந்த சிறுமி உயிரிழப்பு..!

கோவில்களில் திருடியதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். இதில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் இருந்த 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் பகுதியில், சாலையோர கோவில்களில் உள்ள பொருட்களை ஒரு கும்பல் திருடிவிட்டு ஆட்டோவில் தப்பிச்செல்வதாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் விரட்டிச்சென்றனர்.

புதுக்கோட்டை அருகே மச்சுவாடி பகுதியில் அந்த ஆட்டோவை வழிமறித்து அதில் இருந்தவர்களை கைகள், கட்டைகளால் சரமாரியாகத் தாக்கினர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில், காயமடைந்தவர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த சத்தியநாராயணசாமி (48), அவருடைய மனைவி லில்லி புஷ்பா(38) மற்றும் அவரது மகன்கள் விக்னேஷ்வரசாமி(19), சுபமெய்யசாமி(19), மகள்கள் கற்பகாம்பிகா(10), ஆதிலட்சுமி(8) ஆகியோர் என தெரியவந்தது.

இந்த நிலையில், தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி கற்பகாம்பிகா நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சிறுமியை தாக்கியவர்களை பிடிக்கவும், இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.