கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: மேலும் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை

கோவை: கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 5 பேரிடம் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி கார்சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்தஜமேஷா முபின் உயிரிழந்தார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் பிரத்யேமாக முதல் தகவல் அறிக்கையும் பதிவுசெய்துள்ளனர். கார் வெடிப்பு சம்பவம் நடந்த பகுதியை நேரில்ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரிடமும் விசாரணையும் நடத்தினர். இதைத் தொடர்ந்து வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஆதரவாளர்கள் என்ற அடிப்படையிலும் மாநிலம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர்.

இதற்கிடையே, இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக முதலில் விசாரணை நடத்திய கோவை போலீஸார், சந்தேகத்தின் அடிப்படையில் 21 பேரிடம் விசாரணை நடத்தினர். அதன் இறுதியில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். முன்பு கோவை போலீஸாரால் விசாரணை நடத்திவிடுவிக்கப்பட்ட 15 பேரிடம், மீண்டும் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, தினமும் 5 பேர் என கடந்த மூன்று நாட்களாக 15 பேரையும் அவிநாசி சாலை, காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள என்ஐஏ தற்காலிக விசாரணை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். நேற்று 3-வதுநாளாக 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக போலீஸார் கூறினர்.

அதேபோல், இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த முபினின் வீட்டில்நடத்தப்பட்ட சோதனையில் 75கிலோ நாட்டு வெடிகுண்டுகள்தயாரிக்க பயன்படும் வேதிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கியதாக கைதானவர்கள் தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர். இருப்பினும் அதில் சில பொருட்களை சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கியிருக்கலாம் எனஎன்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.