ஊட்டி: நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் வெல்டிங் செக்க்ஷனில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரே மாதத்தில் இரண்டு முறை நடந்த சம்பவங்களால், தொழிலாளர்களிடையே பரபரப்பு அதிகரித்துள்ளது. குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடி பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 19 ஆம் தேதி அதிகாலையில் தொழிற்சாலையில் உள்ள சிடி செக்சனில் பலத்த சப்தத்துடன் வெடி விபத்து நடந்தது. அதில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இன்றும் வெல்டிங் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் DSC செக்ஷனில் பணிபுரியும் ஹிமான்சு, மனோஜ்குமார் ஆகிய இருவர் பைப் பணிக்கு வெல்டிங் பணி செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மனோஜ் குமார் என்பவருக்கு இரண்டு கால்களில் காயம் ஏற்பட்டதோடு இடது கையில் விரல்கள் துண்டாகியுள்ளது. ஹிமான்ச்சு என்பவருக்கு இடது காளில் காயம் ஏற்பட்டு காயமடைந்த இருவர், அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒரே மாதத்தில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இரண்டு முறை விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.