ஸ்ரீவில்லிபுத்தூரில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கேரளாவில் கடந்த மாதம் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்டவர்களைக் கடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.
இந்த தெருநாய்களுக்குப் பயந்து கேரளாவில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாகச் சிலர் துப்பாக்கிகளை எடுத்துச் சென்று பள்ளி வரை வழியனுப்பி வைத்த சம்பவமும் நடந்தது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்திலும் சிறுவர்களை நாய் கடித்து அவர்களை அரசு மருத்துவமனைகளில் அனுமதிப்பது தொடர்கதையாகி வந்தது. இதனால் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை ஏற்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தன்னியா நகர் பகுதியில் வெறிநாய் கடித்ததில் 6 வயது சிறுமி உட்பட 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த 15 நாட்களில் 100க்கும் மேற்பட்டவர்களை வெறிநாய் கடித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.