புதுடெல்லி: காங்கிரசை வசைபாடுவதை தவிர்த்து, குஜராத்தின் மோசமான பாஜ ஆட்சி பற்றி பேசுங்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதிலடி கொடுத்துள்ளார். குஜராத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக குஜராத்தில் நேற்று முன்தினம் பிரசார பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ‘ஜனாதிபதி தேர்தலில் பழங்குடியினரான திரவுபதி முர்முவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கவில்லை. குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டதோடு, உறவினர்களுக்கு சலுகை அளித்தல், சமூக விரோத சக்திகளுக்கு ஆதரவு அளித்தது’ என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி தரும் வகையில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் வெளியிடுள்ள பதிவில், ‘நரேந்திர மோடி ஜீ, நீங்கள் காங்கிரஸ் கட்சியை பழித்து பேசுவற்கு பதிலாக குஜராத்தில் மோசமான பாஜ ஆட்சி குறித்து பேசுங்கள். குஜராத் குழந்தைகளின் எதிர்காலம் ஏன் வீணாக்கப்படுகிறது? 30 மாநிலங்களில், ஊட்டச்சத்து குறைப்பாடு, எடை குறைவான குழந்தைகளில் 29 இடத்தில் குஜராத் இருப்பது ஏன்? குழந்தை இறப்பு விகிதத்தில் 19வது இடத்தில் இருப்பது ஏன்?’ என்று பதிவிட்டுள்ளார்.